புதன், 19 செப்டம்பர், 2012

SUNDARAPANDIAN

சுந்தரபாண்டியன் 

ஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காது - ஒரு பிரபலமான பழமொழி. அந்த வகையறாவில் இந்த ஆர்வக்கோளாறான பிளாக்கர் எழுதுவதையும் சேர்க்கலாம். சில நாட்களுக்கு முன் வெளியான சுந்தரபாண்டியனை பற்றி கொஞ்சம் எழுதலாம் அப்படீன்னு ஒரு ஆசை. படத்தில் எனக்கு தெரிந்த, நான் ரசித்தவைகளையே எழுதுகிறேன்.

டின்னர் முடிச்சுட்டு  உறக்கம் வருவதற்காக லேசா படத்தை ஓடவிட்டால் நமக்கே தெரியாமல் படத்தில் ஆழ்ந்து விட்டேன். சசிக்குமார் படங்களில் நட்பின் நடப்புகளை, காதலின் வேகத்தை பிரமாதமாக காண்பிப்பார். அந்த வகையில் அடுத்து ஒரு நட்பின் பரிணாமத்தை மிக இயல்பான ஒரு கதையை தன் சீடரை இயக்குனராக்கி அவர் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

5 நண்பர்கள். காதல். துரோகம். இதுதான் படத்தோட பிளாட். லேசா சுப்பிரமணியபுரம் வாசம் வந்து போறதை தவிர்க்க முடியல.

சற்றே ஒரு முதிர்ச்சி மட்டும் இல்லாதிருந்தால் ஒரு அற்புதமான நாயகனாக அவரால் இருக்க முடியும். ஆனாலும், படம் முழுவதும் இளமைத்துள்ளல் நிரம்பி வழிகிறது. நண்பனின் காதலுக்கு உதவப்போய் தானே காதலில் விழுவது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று, மேலும் அதரப்பழசான கதையும் கூட. ஆனால் தான் ஏற்கனவே காதலித்த, தன் காதலை மறுத்துவிட்ட பெண்ணை நண்பன் ஒருதலையாக காதலிக்க, அவனுக்கு உதவப்போவது புதிது. அந்த பெண், நாயகி, லக்ஷ்மி மேனன், தன்னைக் காதலிக்கிறாள் என்று நண்பனிடம் இயல்பாக சொல்லுமிடம் வெகு அழகு. படம் முழுவதும் வரும் இயல்பான நகைச்சுவையான வசனங்கள் படத்தைத் தொய்வின்றி கொண்டு செல்கின்றது. உதாரணம் - "தருதலையா போறதுக்கு எப்புடியெல்லாம் யோசிக்கிரானுங்க?".  "சச்சினா இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு". "ஏலத்துல இருந்து மாச கான்ட்ராக்டுக்கு போயிட்டானுங்கடி".

மாமன் மகளிடம் செய்யும் ரகளை, ரசிக்க வைக்கும் சரியான குறும்பு. இன்றும் நமது கிராமங்களில் இந்த விஷயங்கள் உள்ளது. அதேபோல, அந்த பாட்டி. சீயான் சீயான் என்று அமர்களப்படுத்தியிருக்கிறார்,

புது வரவு, லக்ஷ்மி மேனன் நிறைவாய் அழகாக நடித்திருக்கிறார். அதிகப்படியான ஒப்பனைகள் இல்லாமல் தெற்குப் பெண்ணாகவே காட்சி தருகிறார். நடிப்பிலும் அப்படியே. அப்பாவிடமிருந்து கல்யாணத்திற்கு சம்மதம் வந்தவுடன் ஓடிவந்து அப்பாவை கட்டிக்கொள்ளும் நடிப்பு நன்று. யாருப்பா அது அந்த தோழி? நம்ம பக்கத்து வீடு பெண் போல, நல்ல தேர்வு.

சூரி அள்ளுகிறார். மற்றபடி அப்புக்குட்டி, விஜய் சேதுபதி & இனிகோ பிரபாகரன் ஆகியோர் தமது பங்கை நிறைவேற்றியிருக்கிறார்கள். நரேன் கம்பீரமான பாசமான அப்பாவாக நன்றாக நடித்துள்ளார்.

இசை பரவாயில்லை. பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. தேனி, உசிலம்பட்டி வட்டாரத்து பழக்கங்களை அப்படியே காட்டியிருக்கிரார்கள்.

அப்புகுட்டியை தள்ளிவிட்டது சசிக்குமார் இல்லை என்று தெரியவருவது நல்ல ட்விஸ்ட். "குத்துனது நண்பனா இருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது. அதாண்டா நட்பு" என்று சரியான பஞ்ச்  டயலாக் சொல்லி படத்தை முடிக்கிறார் சசிக்குமார்.

ஆனால் படம் முழுவதும் வரும் ஆல்கஹால் பாட்டில்களை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் சரியான ஜனரஞ்சகமான படம். ஆபாசமில்லாமல் படம் தந்துள்ளார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.




சனி, 15 செப்டம்பர், 2012

கொஞ்சம் மனதை தேற்றிக்கொள்கிறேன்

நீ........ண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறேன். இம்முறையும் இதைத்தான் எழுத வேண்டும் என்ற நோக்கமில்லாமல் நுழைகிறேன். கடந்த ஜூலை 12, வியாழன் , காலையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். 
காலை 06.50 மணிக்கு, வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தபோது யாரோ எனது அறையில் இருந்து போனதை பார்த்தேன். கான் ஹை என்று கேட்டுகொண்டே   பிளாட்டின் வராண்டாவிற்கு வந்து பார்த்தால் யாரையுமே காணோம். சரி யாரோ நமது ஆட்கள் வந்திருக்கலாம் என்று  நினைத்தாலும் வினாடிகளில் மறையக் காரணம் என்ன என்ற எண்ணத்தில் படிகளின் வழியாக வெகு வேகமாக கீழிறங்கி பார்த்தால் யாரையும் காணோம். வெளியே சென்று பார்க்கும் பொழுது ஒருவன் வேகமாக சாலையை தாண்டி பரபரப்பாக மறைகிறான். அப்பொழுதுதான் எனது அறையை பற்றிய நினைவு வந்தது. சாதாரணமாக அறையை என்றும் பூட்டியதில்லை. உடனே வாட்ச்மேனிடம் (அவரும் தமிழர், நமது நெருக்கத்திற்குரியவர்) விஷயத்தை சொல்லிவிட்டு, மேலே வந்து எனது அறையை பார்த்தால், ஓ வென்றிருந்தது. எனது தோஷிபா கணினி(I-5, 6GB RAM ), ஒரு E 72, ஒரு புத்தம் புதிய MICROMAX  ஸ்மார்ட் போன்(ஒருவருக்கு பரிசளிப்பதற்காக வாங்கியது),2 கைக்கடிகாரங்கள் மற்றும் கொஞ்சம் பணம் ஆகியவை களவாடப் பட்டிருந்தது. அந்த காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. அய்யோ வென்று நான் போட்ட சத்தத்தில் அருகில் உள்ள நண்பர்கள் வந்தனர்.  ஆனால் நிலைமை கைமீறி போனதென்று எனக்கு தெரிந்தது. அந்த சமயத்தில் வாட்ச்மேன் எனது மடிக்கணினியை கொண்டு வந்தார். அது நான் திருடர்களை  துரத்தியதால் கட்டிடத்தின் பிரதான வாசலில் கதவின் பின்னால் மறைத்து வைத்து விட்டு சென்று விட்டார்கள். அதன் பின்னர் காவல் துறைக்கு சென்றோம். அங்கு FIR பதிவு செய்ய வேண்டுமென்றால், IMEI நம்பர் வேண்டுமென்று கேட்டனர். நான் புதியதாக வாங்கியிருந்தேனே அதனுடைய ரசீதை காட்டினேன். ஆனால் IMEI நம்பர் இல்லாவிட்டால் FIR பதிவு செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர். சரி, கணினியில் கைரேகை உள்ளது, அதை வைத்து கண்டுபிடிக்கலாமே என்றபோது, கணினியில் ரசாயனம் தடவினால் கணினி கெட்டுப்போய்விடும் என்று சொல்லி அதற்கும் மறுத்து விட்டனர். 
உண்மையிலேயே பிரம்மை தட்டிப்போயிருந்தது எனக்கு. 2 மணி நேரம் கழித்து ரசீதை பார்த்தால், IMEI எண் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திரும்ப எனக்கு அங்கு போக விருப்பம் இல்லை. மடிக்கணினி திரும்பக் கிடைத்ததே பெரிய விஷயமாக தோன்றியது. அடுத்த சில வாரங்கள் வெறுமையாக கடந்தது, எனது E 72 இல்லாமல், கையில் கடிகாரம் இல்லாமல். தற்போதைக்கு இருக்கட்டும் என்று, சமீபத்தில், ஒரு கைகடிகாரம் வாங்கிவிட்டேன். E 72 இடத்தை நிரப்ப பொருளாதாரம் இடம் கொடுக்க வில்லையா இல்லை அந்த போனைத் தவிர வேறு எதிலும் மனம் ஈடுபடவில்லையா என்று தெரிய வில்லை, ஒரு மிகச்சிறந்த நண்பனை இழந்த ஒரு வேதனை எனக்கு கிட்டியது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையல்ல.  நான் வேலைக்கு சேர்ந்த பின்னர் ஒரு வருடம் ஆனது அதை வாங்குவதற்கு. ஆனால் எனக்கு தெரியும் காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் அல்லது வேதனையின், இழப்பின் பாதிப்பை குறைக்கும் என்று.

இந்த விஷயத்தை இடுகையிட்டதன் நோக்கம் என்னவென்றால்,

1. அறையை பூட்டிவிட்டு செல்லவும், அருகிலே இருந்தாலும்.
2. முக்கியமான விஷயங்களை, பிரதி வைக்கவும். நான் எனது அனைத்து தொடர்புகளையும், குறிப்புகளையும் போனிலே வைத்திருந்தேன். அதை யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
3. இங்கும் இது மாதிரியான செயல்கள் நடைபெறுகிறது என்பதை (ந)அன்பர்களுக்கு தெரிவிக்க.

முடிக்கும்முன் இரண்டு  செய்திகள். 

1.அந்த திருடனின் விரல் ரேகை இன்னும் எனது மடிகணினியில் உள்ளது. 

2. இந்த ப்ளாக்கில் தலைப்பில் கொடுத்த விஷயங்கள், இவையெல்லாம் நடக்கும் என்று தெரிந்தே கொடுத்ததுபோல் உள்ளது.

மீண்டும் சந்திப்போம். நன்றி.