திங்கள், 9 ஜூலை, 2012


புத்தகங்கள்-2

இவ்வாறு தொடங்கி பிகேபி யின் காதல் வரிகளுக்கும், சுபாவின் எழுத்துக்கும் ரசிகனானேன்கல்லூரி நாட்களில் வந்தியதேவன் கண்ட பிறகு இதுவரை வேறு யாருக்கும் கதாநாயக இருக்கையை தர மனம் முன்வரவில்லை. இவைகள் எல்லாம் கடந்து, சமூக நாவல் வரிசையில் மனம் சென்றது. திரு. சுஜாதா அவர்களுக்கும்  திரு.பால குமாரன் அவர்களுக்கும் என் நன்றிகள். எனக்கு எழுதும் ஆசையைத்தூண்டிய கிரியா ஊக்கிகள் இவர்கள்தான். இவர்களுக்கும் கடிதம் எழுத ஆசைதான்ஆனால் என்ன எழுதுவது என்றுதான் புரிய வில்லைபடிப்பார்களோ இல்லையோ என்ற அவநம்பிக்கை வேறு. கடந்த ஏழெட்டு வருடங்களாக நான் படித்த மிகச்சில எழுத்துக்களுக்கு இவர்களே சொந்தக்காரர்கள். பொன்னியின் செல்வனுக்கு பிறகு, உடையார் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து கொண்டிருக்கிறது. ஆனால், படிக்க சமயம் கொடுக்க மனதில்லை. புத்தக வடிவில் இல்லாமல், எனது கணினியில் திரையில் உள்ளதாலோ என்னவோ?  மேலும், கடந்த 6 மாதமாக 15 நாவல்கள் என் பெட்டியில் உறங்குகின்றன.ஆனால் படிக்கும் பழக்கத்தை கைவிடக்கூடாது என்ற உறுதியுடன் இருக்கின்றேன். படியுங்கள், நல்லதை படியுங்கள், உங்கள் சந்ததிக்கு அதை பழக்கப்படுத்துங்கள். என் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் சில புத்தகங்களை, கதாபாத்திரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜேஷ் குமாரின் விவேக் 
சுபா வின் ராணுவ கதைகள், செல்வா.
பிகேபியின் ரோஜா மலரே ராஜகுமாரி
கோ.வி.மணிசேகரனின் காஞ்சிக் கதிரவன் 

சுஜாதா  --  கணேஷ்--வசந்த், அனிதாவின் காதல்கள், கொலையுதிர்காலம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை. ஸ்ரீரங்கத்து தேவதைகள்(இணையத்தில் சுஜாதாவின் சிறுகதைகள் என்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - அருமையான கதைகள்)

பாலகுமாரன்  - அப்பம் வடை தயிர்சாதம், தலையணை பூக்கள், என் கண்மணித் தாமரை,இரும்புக்குதிரைகள், சேவல் பண்ணை, பந்தயப்புறா, முன்கதை சுருக்கம், ஆனந்த வயல், திருப்பூந்துருத்தி & உடையார்.

சாண்டில்யன்  -- கடல் புறா, யவன ராணி, மன்னன் மகள், ராஜ முத்திரை.

கல்கி  - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்.

புத்தகங்கள் - 1


புத்தகங்கள் - 1 

படித்தல் என்பது ஜனரஞ்சக பத்திரிக்கைகளின் மூலம் எனக்கு பிடித்தலாகிப்போனது. 1980 களில் ஒரு மிகச்சிறிய கிராமத்தில் ஜனரஞ்சகப்பத்திரிக்கை என்பது வார இதழ்கள் , மாத இதழ்கள் மற்றும் நாவல்கள்தான். அதுவும் வாங்கும் சக்தி படைத்தவர்கள் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் மூலம் ஒவ்வொரு வீடாக அந்த புத்தகம் பயணப்படும். அச்சிறு வயதில் நான் வாங்க முடியாது. அவைகளை சிறுவயதினர் படிப்பதே குற்றம் என்ற பொதுவான கருத்து இருந்த நாட்கள் அது.

அந்த வகையில் நான் விதிவிலக்காக, எங்களுடைய வீட்டில் இருந்தே புத்தகங்கள் சென்றது. அதற்கு முக்கிய காரணம் எனது மாமா. வாரம் இரண்டு நாட்கள், சனி & ஞாயிறு , விடுமுறையில் எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார். ஒவ்வொரு முறையும் அவர் வருகையை ஆவலோடு நான் எதிர்பார்ப்பேன். காரணம், அவர் கொண்டுவரும் நாவல்களுக்காக. அவரை மிகவும் பிடிக்கும் என்பது பொதுவான விஷயம். எனக்கு பல விஷயங்களில் நல்ல வழிகாட்டியாக, என்மீது அக்கறை கொண்டவராக இருந்தவர்களில் அவரும் ஒருவர்.

விடுமுறை தினங்களில் ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஒருவகையான தண்டனை. அதிலிருந்து தற்காத்துக்கொள்ள புத்தகங்கள் மிகவும் உதவின என்று சொன்னால் மிகையல்ல. அதுவும் எனது ஆரம்பமே நாவல்களில் இருந்து தொடங்கியது. 4 ஆம் அல்லது 5 ஆம் வகுப்பு படிக்கும் சமயத்தில் ராஜேஷ் குமார் அவர்களது நாவல்கள் மூலம் தமிழை மிகச்சரளமாக கையாள முடிந்தது.(எனது கல்லூரி வகுப்புத்தோழனின் தாய்மாமா அவர் என்று என் நண்பனுடைய தமக்கை திருமணத்தில் அவரை சந்தித்தபோது ஆனந்த ஆச்சரியம்) எனது தொல்லை தாங்க முடியாமல் கல்கண்டு, முத்தாரம் (எத்தனை பேருக்கு தெரியும் அல்லது ஞாபகமிருக்கிறது?) என இரண்டு இதழ்கள் வீட்டிற்கு வரத்தொடங்கின. 

அந்த சமயத்தில்தான் குமுதத்தில் கடல் புறா தொடர்கதையாக  வந்துகொண்டிருந்தது. அந்த வயதில் நிச்சயமாக சாண்டில்யனின் எழுத்தின் மேல் ஈர்ப்பு வரவில்லை. விடலைப்பருவம் தாண்டிய பிறகு தேடித் தேடி சாண்டில்யன் எழுத்தை படித்தது வேறு விஷயம். நிறைய வார, மாத & மாதமிருமுறை என பத்திரிக்கைகள் தமிழகத்தை ஆண்ட காலம் அது. தாய், கல்கி, குங்குமம் ஆகிய ஆட்சிக்குப்பின் கே.பாக்யராஜின் பாக்யா ஒரு புரட்சியையே உண்டுசெய்தது எனலாம். ஆனந்த விகடன் விமர்சனம் என்றால்         எந்த டைரக்டரும் பயந்த காலகட்டம். விகடனில் 40 மதிப்பெண் என்றால் ஒரு மரியாதை என்றொரு நிலை இருந்தது. குமுதம் என்றால் கடல் புறா தவிர, 6 வித்தியாசங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. பொழுது போகாத பொம்மு (என்னைப்போல்) ஒருவர். சிறுவர்களுக்காக என்றால் அம்புலிமாமா, பாலமித்ரா & கோகுலம் கதிர் ஆகியவைகள். இதில்,, கபீஷின் வால் மிகப்பிரபலம். எங்கே போனது இத்தனையும்??

சனி, 7 ஜூலை, 2012

படப்பதிவுகள் 

புகைப்படம் எடுத்தல் எனக்குப் பிடித்தமான ஒன்று. சிறு வயதில் இருந்தே ஒரு சில விஷயங்களில் ஈர்ப்பு இருந்தது. அவற்றில் மிக முக்கியமானவைகளாக புகைப்படக் கருவியும், கீ போர்டும் (கல்லூரி பருவத்தில்) இருந்தது. ஒரு நல்ல புகைப்படக் கருவி வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் ஏறக்குறைய 25 வருடங்களாக புதைந்து கிடந்தது.

வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாமும் தந்து விடாது. இது என்னுடைய பார்வை. முயற்சிக்கும் மனப்பான்மை மட்டும் ஒருவருக்கு வெற்றியை தந்து விடுவதில்லை. பொருளாதார சூழ்நிலை, ஊக்குவித்தல் மற்றும் சமுதாய நிலை ஆகியவைகளே தூண்களாக நிற்கின்றன.

சென்ற வருடம் வரை எனது ஆசை வெறும் கனவாகவே இருந்தது, ஒரு சாதாரண ஒளிப்படக்கருவி கூட வாங்காமல். இப்பொழுது ஒரு ஒளிப்படக்கருவி என் கைகளில். ஆக நான் வாங்கும்பொழுது புகைப்படக் கருவியாக இருந்தது அறிவியல் முன்னேற்றத்தினால் ஒளிப்படக்கருவியாக மாறியது.(பிலிம் காலத்தில் ஆரம்பித்து டிஜிட்டல் காலத்தில் முடிந்தது).

சதி லீலாவதி படத்தில், கமல்ஹாசன் தன் மகனை, மனைவியாக நடித்த கோவை சரளாவிடம் சொல்லும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. " நம்ம புள்ள போன ஜன்மத்தில பாம்பாக பொறந்திருப்பானோ? இப்படி படம் பிடிக்கிறான்?" என்று கிண்டலாக கூறுவார். இதற்கும் என் பதிவிற்கும் உள்ள ஒரே விஷயம் ஒளிப்படக்கருவி மட்டும்தான். இது ஒரு இடைச்செருகல் மட்டுமே.

சரி, கேமரா விஷயத்திற்கு வருவோம்... 2010 ல் ஒரு சிறிய கேமரா, ஒரு 5000 ரூபாயில் வாங்கலாம் என்று ஆரம்பித்து, 2011 செப்டம்பர் வரை தேடும் படலமும் யோசனையும் வளர்ந்துகொண்டே போனது. யோசனை வளர வளர பொருளாதார முதலீடும் வளர்ந்து கொண்டே போனது தெரிந்தாலும் அதன் கடைசி எல்லை வரை போனது. ஒரு கட்டத்தில் இதுதான் வேண்டும் என்று தீர்மானித்தபோது, மயக்கமே வந்துவிட்டது. ஒரு சிறந்த சலுகை நாளில் வாங்கியும் வந்துவிட்டேன். அன்று இரவு தூங்கவில்லை. ஒரு சிறு குழந்தையின் சந்தோசமும் பிரமிப்புமாக அந்த இரவு போனது.

இடுகை நீண்டுகொண்டே போவதால் முதற் பகுதி என்று நினைத்து முடிக்கின்றேன்.








பின்குறிப்பு:: வெறுமே எவ்வித நிர்ணயமும் (செட்டிங்ஸ் ) இல்லாமல் எடுத்த சில படங்களை தருகிறேன்.. 
நல்ல விஷயங்கள் எவ்வளவோ வருகின்றன. ஆனாலும் கவனத்தை ஈர்ப்பதென்னவோ மற்றவைகள்தான். இன்றைய சூழ்நிலையில் கவனச்சிதறல்களுக்கு முக்கிய காரணமாக வலைத்தேடல்களை என்னால் குறிப்பிட முடியும். சமீபத்தில் அதிர்ச்சியான விஷயங்களும் கண்ணை குத்திவிட்டிருக்கிறது. அதுபற்றி வேறொரு நல்லநாளில் இடுகை இடவும் உத்தேசித்துள்ளேன்.

பல மாதங்களாக எனது ஒளிப்படக்கருவியின் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள நினைத்து நினைத்து,, நேற்று வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளேன். இனிவரும் நாட்களில் தொடர் பதிவுகள் இடலாம்.

பின்குறிப்பு:: இதுவே எனது முதல் இடுகை..